திங்கள், 15 ஏப்ரல், 2024

வாக்களிப்பீர்......

வாக்களிப்பீர் மக்களே!
=============================













=============================
மறக்காமல் வாக்களிப்பீர்......
=============================
தூண்டிலிலே தொக்கிநிற்குஞ் சுவைமிக்கத் துண்டுணவை
வேண்டியதால் மீன்கொண்ட வேதனையை எண்ணாமல்,
காண்பதெலாங் கொள்வதுவுங் கண்போக்கிற் களிப்பதுவும்,
மாண்பென்று மயங்காத மானிடர்க்கே வாக்களிப்பீர்!

தன்னெறியாய்த் தருக்கரவர் தயக்கமற தரணியிலே,
இன்னெறியாய் மயங்குமந்த ஏற்றமில்லாக் கொடும்பாவப் 
புன்னெறியாம், புரையோடு புறம்போக்குப் புழுதியிலே, 
என்றுமுழல் எத்தரிங்கு வீழ்ந்திடவே வாக்களிப்பீர்!

எடுத்தபணி யதன்மீதே எண்ணங்க ளாழ்ந்தூன்ற, 
முடிப்பதற்கு முன்னின்று முடங்கரற முயலாமல்,
அடுக்கடுக்கா யழுக்கென்னு மாழியிலே வீழ்ந்துழலும்,
நெடுமரத்துக் கயமைகளும் நெக்குவிட வாக்களிப்பீர்!

பணமென்றும், பதவியென்றும், பழகுந்தீ வழக்கென்றும்,
தணலேறி தகிக்கின்றச் சழக்கென்றும், சலிப்பில்லா
துணவென்று மரசியலி லுழலுகின்ற உலுத்தர்கள் 
கணப்போதிற் கரைந்தோடக் கடுஞ்சினத்தில் வாக்களிப்பீர்!

சங்கிலியாய்ப் பின்னலிடுஞ் சருகனைய வாழ்வினிலே
மங்குலென நிலையின்றி வஞ்சகரும் மயக்கத்தில் 
முங்குவதால், நல்லவர்கள் முன்னெடுக்கும் நல்லறமே 
இங்குநிதம் பொலிந்திடத்தா னெழுச்சியுடன் வாக்களிப்பீர்!

உள்ளத்தி லூழ்க்கின்ற உலையனைய உணர்வுகளைக்
கள்ளங்கள் கருக்கொண்ட கருப்புநிறக் கனவுகளைத்
துள்ளுகின்ற துடிப்புடனே துய்ப்பதுதான் சுகமென்றே
கொள்ளுகின்ற கொடுமைகளைக் கொளுத்திடவே வாக்களிப்பீர்!

ஏக்கழுத்தம் ஈடணைகள் ஏறியதால் இலக்குவனால்,
மூக்கிழந்த சூர்ப்பனைபோல், முடந்தையென எந்நாளும்
ஓக்கமிலா தாடுகின்ற ஊடகங்கள் அதிர்ந்துறைய,
சாக்கடை அரசியலும் சாய்ந்துவிழ வாக்களிப்பீர்!

எளிதாக எதுவுமிங்கே இலவசமாய் வருவதில்லை;
சுளுவாக உன்கழுத்திற் றொடையலும் விழுவதில்லை; 
தெளிவாகச் சிந்தித்தே திடமாகத் தேர்ந்தெடுத்து,
நெளிவில்லா நோக்குடனே நேர்மைக்கே வாக்களிப்பீர்!

உடலுழைப்பி லுருவாகு முயர்வான ஒற்றுமையே
உடமையென உலகிலுள்ள உயிர்களெலாம் உணர்கையிலே,
கடமைகளும் கருத்தேறி, களமீதில் வளர்ச்சிகளும்,
நடக்குமென்ற நன்னெறிக்காய் நல்லவர்க்கே வாக்களிப்பீர்!

தளர்வின்றித் தயக்கமற சலிப்பில்லாத் தவிப்புடனே,
களமீதிற் கருத்திலங்கிக் கானல்நீர்க் கனவகற்றுந் 
தெளிவான அரசியல்தான் திறன்மிகுந்தத் தாய்நாட்டின் 
வளர்ச்சிக்கு வழியென்றே வல்லவர்க்கே வாக்களிப்பீர்!

வல்லாட்சி அரசியலின் மமதையினால் நாடோறும் 
சொல்லொணா தழல்போன்ற துன்பத்தி லெரிந்துநிதம்
கல்வியின்றி, காசுமின்றி கண்போக்கில் வாழுமெங்கள் 
இல்லாத ஏழைகளின் எழுச்சிக்காய் வாக்களிப்பீர்!
=====================================================
இராச. தியாகராசன்
====================

பிகு:
====
புன்னெறி = தீயநெறி, முடங்கர் = மாற்றுத் திறனாளி, நெக்குவிட = விரிசல்விட,
உலுத்தர் = கயவர், முங்குதல்= மூழ்குதல், ஊழ்த்தல் = பிறப்பெடுத்தல், 
துய்த்தல் = சுவைத்தல், ஏக்கழுத்தம் = ஈகோ, ஈடணை = இறுமாப்பு, 
முடந்தை = ஊமை, தொடையல் = மலர்மாலை, வல்லாட்சி = சர்வாதிகாரம்.

புதன், 6 மார்ச், 2024

மங்காமல் வாழும் வழி...

இற்றைக்கு என்னுளத்தை பாதித்து, சிந்தனையைச் சிலுப்பிய சமுதாய நிகழ்வுகளின் தாக்கத்தால் உருவான ஒரு பஃது வெண்பா அந்தாதி மாலையிது.
நங்கையர் நாளுக்காய் ஒரு மீள்பதிவு செய்கிறேன்.  சமீப காலமாய்ப் புதுவை என்றில்லை, இந்தியத் துணைக்கண்டம் யாங்கணுமே பரவலாக சிற்றகவை, பேரகவைப் பெண்டிரை சீரழித்துக் கொல்லும் கேவலமான பண்பாடு ஏனிப்படி நச்சுக் கொடியாய் வளர்ந்தோங்கி கவிந்திருக்கிறது? இந்த நிலைமைக்கு முடிவு வரவே வராதாவென்று ஏங்குகிறது உள்ளம். அன்று நிர்பயா, அனிதா, ஆசீபா, கௌரி லங்கேஷ், த*ம*ரி, தூ*து*கு*,  @*ணி*ப்பூ*@, *ள்ளா*சி;  இன்று புதுவையின் ஆர்த்தி.  (முழுசாய் ஊர் பெயரைச் சுட்டினால், பதிவு எவரையும் அடையாதென்பதால், மறைபெயர்; அன்பர்  மன்னிக்கவும்)
============================================












============================================
மங்காமல் வாழும் வழி....
(ஒரு பஃது அந்தாதி வெண்பா மாலை)
====================================
தேனிருக்க நஞ்சினைச் சீரென்றே நாடுகின்ற
மானுடமே! சீர்த்திமிகு வாலிபமே! - கானினுறை 
மாக்களல்ல நாமென்றும் வஞ்சியரைப் போற்றுவதே 
ஊக்கமுறை ஓங்கலெனும் வாழ்வு. (01)

வாழ்விதுவே வாழ்வென வாழ்தலையே வாழ்த்தலின்றி 
வாழ்ந்துநிதம் வாழ்வறுந்த வாழ்வினமே! - சூழ்துயரந் 
தானகன்றே எம்மகளிர் தானவர்போல் வாழ்ந்திருக்கக் 
கூனகலக் கோடுதலே கோது. (02)

கோதின் வழியிருந்துங் குற்றமிலாச் சீரிருந்தும், 
மாதரவர் மாண்பினையே மாசாக்கும் - வேதனைகள் 
வேர்த்தழிய வேண்டுமென வீறுகொண்டே மாந்தரினம்
ஆர்த்தெழுந்தால் நீறாகும் ஆசு. (03)

ஆசுகளைக் கொள்ளியிட்டு ஆற்றலுடன் நம்மிளையோர்
பாசமுடன் பண்பாட்டைப் பார்ப்பதுதான் - நாசமற,
நங்கையரு மிப்புவியில் நன்னலமே பெற்றிலங்கி,
மங்காமல் வாழும் வழி. (04)

வழியில்லாப் பாதையிலே மானமின்றிச் சென்றே 
அழிப்பதுதான் ஆக்கமுறை அன்போ? - செழிப்புறவே
மாந்தரும் மங்கையரை வாடாமற் காத்துநித  
மேந்துவதே என்று மெழில். (05)

எழிலாரும் பெண்மையத னீகையெனும் பண்பே
வழுவில்லா வையகத்தின் வாசல்! - விழுப்புறவே
சால்பனைத்து மள்ளியிடுந் தன்னலமே இல்லாத
ஆல்நிகர்த்த அன்னையெனு மன்பு. (06)

அன்பொன்றால் தாயெனவே ஆதரித்துக் காத்துநின் 
றின்பந் தருபவளும் இன்மகளே! - இன்றுலகிற் 
றங்கையென அக்கையெனத் தாயுமெனத் தாரமென 
மங்கையரைப் போற்றுதலே மாண்பு! (07)

மாண்பென்ற சொல்லுக்கு மாறா இலக்கணமாய் 
ஆண்கள் அறவழியில் ஆர்த்தெழுவோம்! - பெண்ணுயர 
எல்லாருங் கைகோத்தே ஈனமெலாந் தீயிலிட் 
டில்லாமற் செய்வதுவே ஏற்பு. ( 08 )

ஏற்ப தனைத்தும் இயல்பென் றிருக்கவா 
நேற்றிங்(கு) உதித்தோமிந் நீணிலத்தில்? - தூற்றும்பேர்  
ஆளுமெம் பெண்டிரின் ஆற்றலை மாய்த்துவிடின் 
தாளுமோ தாயகந் தான். (09)

தானென்ற வாழ்வுஞ், சரிகின்ற எண்ணமுங் 
கானலின் நீராய்க் கருதியே - நானிலப்பெண் 
தாழ்வற் றிருக்கச் சலிக்கா துழைப்பவர்
வாழ்வே அமுதமயத் தேன். (10)
====================================== 
இராச. தியாகராசன்.

பி.கு:  
====
ஓங்கல் = குன்று,  கோது = நேராக (சீப்புக்கு இன்னொரு பெயர் கோதுகலம்), 
விழுப்பு = சிறப்பு. சால்பு= மேன்மை/நற்பண்பு, மாண்பு= மாட்சிமை/ பெருமை.

திங்கள், 12 பிப்ரவரி, 2024

கவிதையெனக் கோக்கின்றாய்...

என்றன் நெஞ்சகத்தின் தவிசமர்ந்து, காலமெலாம், கருவுதித்தச் சிந்தனையின் கனவுகளைச் சொல்லடுக்கிக்  கவிதையென எழுதியிறைக்கின்ற.....

மந்திரமாய் வித்தகியின் வினோதங்கள்; 
தந்திரமாய்ச் சித்திரத்துச் சாலக்குகள்;  
ஓவியமாய் உத்திரத்து நூல்வலைகள்; 
காவியமாய் கதலிச்சுவை கயல்விழிகள்;   எத்தனையெத்தனையோ.....
==============================
==============================
கவிதையெனக் கோக்கின்றாய்..
==============================
சித்தமதில் தான்பதிந்தே சிந்தாமல் சிதையாமல்,
பித்தன்புத் தூரிகையாற் றீட்டுகின்ற ஓவியம்போல்,
புத்தமுதப் பொன்னணங்கே புதுமையெனப் புந்தியில்நீ,
எத்தனையோ கவிதைகளை எழுதிவைத்துப்  பார்க்கின்றாய்!

சிதிலமான செங்கல்லாய்ச் சிதறுகின்ற நினைவுகளில்
பதியுமந்தப் பாழுளத்துப் பாதவலி வேதனைகள், 
ஏதுமற்ற இருள்வெளியாய் இதயத்தைத் துளைக்கையிலே,
உதயமான உணர்வுகளை உருக்கிவரிச் சேர்க்கின்றாய்!

அள்ளிமனங் கொள்ளையிடும் அமுதமழை சாற்றைப்போல்,
வெள்ளிமலை மேல்விளைந்த விண்ணருவி  ஆற்றைப்போல், 
துள்ளுகின்ற பூச்சியென தோன்றியுள்ளே ஆடுகின்ற,
புள்ளியெழிற் கோலமனை பொங்கும்பா  வார்க்கின்றாய்!

வனமடர்ந்த மனவெளியின் வாசங்கள் மாறுகையில் 
மனத்துள்ளே மானுடத்தின் மயக்கங்கள் மருகிநிதம்
தினவெடுத்த எண்ணங்கள் தீச்சொரியும் காருளத்தில் 
கனவுகளைக் கார்காலக் கவிதையெனக் கோக்கின்றாய்!
  
வையகமும் மானுடமும் வாழ்நாளில் உய்த்துமனம்
துய்த்துணர வேண்டியதைத் துல்லியமாய்த் தூய்மையெனும்
மெய்யான மெய்யதனை மிளிர்கின்றப் பாவடிவில்,
செய்யவைத்தே கவிஞனெனைச் சீர்த்தியுடன் காக்கின்றாய்!
=====================================
இராச. தியாகராசன்

பிகு:
====
தவிசு = மணைப்பலகை, பொன்னணங்கு = தங்கம் போன்ற பெண், புந்தி = அறிவு, சீர்த்தி = கீர்த்தி/புகழ்

வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

காற்றிலே பறக்கலாம் வாராயோ...

காதலர் நாளுக்காய் இன்னொரு பாட்டு...
======================================













======================================
காற்றிலே பறக்கலாம் வா... தோழி.
======================================
நியதிகளும் நெக்குவிட ஆடுகின்றேன்;
நித்தமுன்றன் நன்னலமே நாடுகின்றேன்;
மயிலொத்த நங்கையுனைத் தேடுகின்றேன்;
மயக்குருவ மாயத்தால் வாடுகின்றேன்!

இன்றைக்குன் வண்ணமெனும் பூச்சால், 
என்றென்றும் உன்நினைவென் மூச்சு;
கன்னலனைக் கண்ணசைவின் வீச்சால், 
கவிதையெனப் பொங்கிவரும் பேச்சு! 

வாடையின் குளிரால் முகிழ்கனைவை,
கோடையில் கொளுத்தி டும்நினைவை,
ஊடலும்  பிரித்த நம்உறவைப் 
பாடலாய்ப் பதியவைத்த பாவையே!

காதலின்பக் காரிகையே இன்றுமுன்றன்
கயல்விழியாந் தூண்டிலிலே சிக்கவைக்கும்
நாதமுறை நாயகியே, என்றுமுன்றன்
நயனமொழி வலைவீச்சே என்கோலம்!  

நாட்டியம் சொல்கிறாய் ஆடலால், 
பாட்டியல் சொல்கிறாய்ப் பாடலால், 
காட்டுதல் செய்தெனை தினந்தினம் 
வாட்டுதல் செய்கிறாய் வனிதையே!

ஓடையில் சலசலக்குந் தென்றலாய், 
உன்னெழில் வருகையைக் காண்கையில், 
ஆடகப் பொன்னென மின்னுமுன்றன்
அயில்வேல் விழியெனைக் கொல்லுதே!

சின்னஞ் சிறிய காற்சரத்தில்,
சிதறிச் சிரிக்கும் சிறுவொலியில்,
என்னில் பதிந்த முழுநிலவுன் 
கன்னற் சுவைமொழி கேட்டதனால்,

காலையின் கதிரிலே காலமுழுதும்,
காட்சியாய்க் கவிந்திடுங் கனவினையே
வாலைக் குமரியுன் மதிமுகத்தை 
மறக்கவே முயல்கிறேன், முடியவில்லை!

காற்றிலாடு மலரின் ஒயிலதே 
காதற்பெண் ணுன்றன் சிற்றிடையா?
சேற்றுவயல் மேவிய நெல்லசைவே 
செப்புச் சிலையுன்றன் மெல்லியலா?

மலரில் தோன்றும் மங்கையுருவை, 
மனத்தில் நிறையும் நங்கையழகை, 
நிலவின் நிழலும், திரையலைவும்,
நீர்க்கவில்லை மறைக்கவில்லை!

கண்ணைத் திறவாப் பொற்சிலையா 
கண்ணே உன்றன் இன்னுருவம்?
வெண்மை யொளிரும் நித்திலமா  
விண்ணின் நிலவுப் பெண்ணுருவம்?

கண்களை மூடினால் கன்னியுன் 
காட்சியாய்க் காணுமென் நிலையை
எண்ணியே ஏங்குமென் கனவை
எடுத்தே இயம்பிட ஆருண்டு?

என்னிதயச் சிறகென்னும் சிந்தனையை
இன்பந்தரும் உன்சொல்லால் ஒடித்தாயே; 
அன்றுமுதல் அன்றாடம் அலைந்துதிரிந்து, 
அனைத்துமே மறந்துலகில் சடமெனக்கு  

உண்ணுகின்ற உணவும் சுவைக்காமல்,
உலகாய உணர்வதும் இனிக்காமல்,
கண்ணிமைகள் முத்தமிடும் என்துயிலும் 
காலமெலாம் காணாமற் போனதுவே!

காட்சிகளில் தோன்றும் வடிவெழிலைக் 
காணுகின்ற வஞ்சியுன் கோலமதை,
சாட்சியாய்ச் சொல்லும் தண்மதியும்  
சார்ந்தே உரைப்பதை அறிவாயா?

ஒவ்வொரு முறையும் காண்கையிலே
உள்ளத்தில் கத்தியால் குத்துவதேன்?
கவ்வியே பற்றிடும் கனலொளிர்க் 
கண்ணெனும் தீயினால் எரிப்பதுமேன்?

காதருகுக் குழலசைத்துக் கனிவுடனே 
காற்றலைத் தூதுவன் கதைபேசும்
நாதத்தை நித்தம்நீ கேட்கையிலே
நலம்கேட்கும் நானென்றே புரியாதா?
 
துன்பத்தைத் தொலைத்தே எறிந்திட, 
துயர்களும் சுருங்கியே மறைந்திட, 
கன்மங்கள் கரிந்தே கரைந்திட, 
கனசோராய் நித்தமும் தோழியே;

சிரமமின்றி சிந்தையில் ஒன்றிணைந்து,
தேடுதலை நாடுதலை தான்மறந்து
விரும்பியுளம் சேர்ந்தே கனிந்துருகி
வேண்டாத வற்றையே வெறுத்துவிட்டு,

வானம்பாடி போலவே நாமென்றும்
வலிகளைத் தான்மறந்தே இன்றிங்கு 
கானம்பாடிக் களிப்புடனே கவலைமறந்து 
காற்றிலே சிறகடிப்போம் வாராயோ? 
============================
இராச. தியாகராசன்

பிகு:
====
ஆடகம் = சிறந்த பொன்
அயில்வேல் = கூர்மையான வேல்

புதன், 24 ஜனவரி, 2024

எம்புதுவை வாருங்கள்...

நான் பிறந்ததிலிருந்து 1977 வரை தஞ்சை, நாகை (வெளிப்பாளையம், காடம்பாடி), கடலூர், முதலான ஊர்களே என்றன் வசிப்பிடங்கள்.  1977இல் இருந்தெனையொரு  பாவலனாக (கவிஞனாக), ஒரு துடுப்பாட்ட வீரனாக (கிரிக்கெட்டு ஆட்டக்காரனாக),  குமுகாயத்தில் தாழ்வுற்றோர்/ ஊனமுற்றோர்/ முது குடிமக்களுக்கு என்னால் இயன்றதைச் செய்யும் எளியோனாக, மருத்துவம் அனுமதிக்கும் அளவுக்குக் குருதிக் கொடையளிப்பவனாக, என் விழிப்படலத்தை/உடலை கொடையளிக்க ஆவனச் செய்திருப்பவனாக, புதுச்சேரி அரசுத்துறையில் ஒரு ஊழியனாக, பணிநிறைவில் ஒரு அரசிதழ் அலுவலனாக ஆக்கி வாழ வைத்திருக்கும் புதுவையே இற்றைக்கு என்றன் ஊர். வாழ வைத்திருக்கும் மண்ணை மட்டுமின்றி, எந்த ஊரையும், நல்ல மனம் படைத்தவரையும், எனை வாழவைக்கும் பேரையும், என்றன் பொள்ளிகையைத் தூற்றுபவரையும் கூட,  போற்றுகின்ற பண்பினை, கற்றுத் தந்ததிப் புதுவை மண்ணே!

என்றுமே எம்புதுவை பாவானம் தான்.  எத்தனை மரபியற் கவிகள்;  எத்தனைப் புதுக்கவிகள்;  எத்தனை பாவரங்கங்கள்; எத்தனைக் கவிமாமணிகள்;  எத்தனைக் கலைமாமணிகள்;  எத்தனைத் தமிழ்மாமணிகள்.

==============================













==============================
பா - வானம் எம்புதுவை
=======================
மன்னவரை, மாடதனை, மாண்பெனவே கொள்ளாமல்,
மன்பதைக்கே வாழ்ந்திட்ட மாகவியின் பாச்சுவையே
என்புரட்சிப் பாவலனின் ஏற்றமிகு பாச்சொடுக்கே
இன்பமெனக்(கு) என்றிருக்கும் இன்னூராம் என்புதுவை!

பாருலகைப் பாடியநம் பாரதியாம் நாவரசைப் 
பாரதியின் தாசனவன் பாசமிகு பாவரசை, 
வேருடனே தாங்கிநின்று மேதினியோர் ஏத்துபுகழ்ப் 
பேரதனை எந்நாளும் போற்றிநிற்கும் என்புதுவை!

தெண்டிரை ஆழிசூழ் செம்புலத்து மண்ணிலே, 
வண்டமிழ் வண்ணமும், வள்ளையும் சிந்துமாய்த் 
தண்ணிலவுச் சொல்லடுக்கிச் சந்தமணப் பாப்புனைய, 
விண்முட்டுச் சங்கொலியாய் வீற்றிருக்கும் என்புதுவை! 
  
பண்ணொடு பாங்கெழிற் பாட்டியலின் சாற்றுடனே, 
எண்ணமுகிழ் எந்தமிழின் இன்பத்தேன் ஊற்றெனவே, 
வண்ணஞ்சேர் பாவொளிரும் மன்னுதமிழ் நாற்றெனவே, 
எண்ணிலாப் பாவரங்கம் ஏந்திநிற்கும் எம்புதுவை!

கண்ணிமைப்பில் கன்னற்பா கட்டுகின்றார் பாரய்யா;
மண்ணகத்து மாந்தரெலாம் வாழ்த்துகின்ற சீரய்யா;
தண்டமிழைத் தாழாது தாங்கிநிற்கும் பேரய்யா;
ஒண்டமிழர் வேங்கையென ஓங்கிநிற்கும் ஊரய்யா!

தீவானச் செந்தழலாய்த் தீந்தமிழின் சொல்லெடுத்துத்
தூவானந் தூவுகின்ற தூறலெனப் பன்னூறாய்,
நாவார நற்கவிதை நாடோறும் நான்புனையும்
பாவானம் என்புதுவை பார்!
=======================================
இராச. தியாகராசன்

பிகு:
====
மாடதனை - செல்வத்தை, மன்பதை - மண்ணுலகு, இன்னூர் - இனிய ஊர், தெண்டிரை - தெள்ளிய அலை, ஆழிசூழ் - கடல்சூழ், வண்டமிழ் - வளமைத் தமிழ், தண்ணிலவு - குளிர்நிலவு, தண்டமிழ் - தண்மை+தமிழ், கன்னற்பா - கரும்பனைய பாட்டு,  ஒண்டமிழர் - ஒளிர்கின்ற தமிழர், பா-வானம் - பாக்கள் நிறைந்த வானம்.

செவ்வாய், 23 ஜனவரி, 2024

வேய்குழல் மாயவா...

"என்னையா ஒரே சிவன் பாட்டாப் பாடியறுக்கிறாயே, உனக்கு இராமனையும்/ விஷ்ணுவையும் பாடவே தெரியாதா," என்று வலதுசாரி அன்பரொருவர் "அன்பாகவும் அறிவாகவும்" எனைப்பாடி வறுத்ததால், "அரியும் அரனும் ஒண்ணு, அறியாதவர் வாயிலே மண்ணு," என்று சொல்லி, இப்பாட்டை எழுதினேன். இனி வரும்நாளில், அந்தப் பாலாழி ஶ்ரீபத்மநாபனே நம்மையும், நம்மக்களையும், நம்நாட்டையும் காத்திடவே வேண்டுகிறேன்.
=========================================












=========================================
பாலாழி பத்மநாபா...
====================
சூதனும் பொற்கதிர்த் தூரிகை ஏந்தியே சோதியாய்க் காட்டிடுஞ் சுந்தர நந்தனே; நாதமாய் வேணுவும் நளினமாய் ஒலித்திடக் கோதுளம் காக்குமெம் குழலிசை விந்தனே! கமலினி பற்றிடும் கனிந்தகார் வண்ணனே; எமதுளம் உற்றிடும் எழிமிகு கண்ணனே; திமிரிலே உழல்நிலை தீய்க்குநர சிம்மனே; சமரிலே வென்றயெம் கோகுல மன்னனே! யாதவர் ஏத்திடும் இன்முகத் தூயனே; பூதலம் போற்றிடும் பூமகள் நேயனே; சீதளத் திருமகள் சீந்திடும் மாலனே; மேதினி காக்குமெம் வேய்குழற் கோலனே!
===============================
இராச தியாகராசன்

பிகு:
====
சூதன் - சூரியன், கோதுளம் - வெற்றுப்பதரான உளம், கார்வண்னன் - நீல மேக சியாமளன், சீந்திடும் - போற்றிடும்/ ஏற்றிடும், வேய்குழல் - மூங்கிற் புல்லாங்குழல்.  

திங்கள், 22 ஜனவரி, 2024

மகத்தான மானிடரே பாருங்கள்...

 தோன்றியதை எழுதுகின்ற இறைவனை நம்புகின்ற  பாவலன் நான்.  கள்ளங் கசடறவே, ஊதுவுலைத் தீயிலிட்டு, கவிநெய்யும் தூயமனப் பாவலன் நான். நட்பிலிருக்க வேண்டுமென்போர் இருந்து சுவையுங்கள்;  தேவையில்லை என்போர் போய்க்கொண்டே இருங்கள்!  என்னுடைய உடலில் உயிரிருக்கும் வரை, எவரென்னைத் ஏற்றினாலும், தூற்றினாலும் நிற்காதென் கவிமுரசம்;  என்றென்றும் அறத்தையும், மனித நேயத்தையும் ஒலித்துக் கொண்டே இருக்கும். என்னுடைய சுற்றத்தவரே எனை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை; என்கவிதைகளைப் படிப்பதுமில்லை. என்றென்றும் அந்தச் சீர்காசியத்தன் ஒருவனின் அருளெனக்கு போதும்.
======================================
======================================
மகத்தான மானிடரே பாருங்கள்...
================================
செழிப்புடனே நம்மக்கள் சிறந்துலகில் எழுச்சியுற,
அழலெடுக்கும் கொடியோரின் அறமழிக்கும் ஆணவத்தை, 
குழிபறிக்கும் கோணலையே கூத்துவல்யன் சீரருளால், 
விழிப்புடனே வீரபத்ரன் மிதிதொறுப்பான் பாருங்கள்!

எம்மகளிர் எரிநெருப்பில் எக்கலிக்கும் எத்தரவர், 
வெம்பிவிழ வெறுங்கனவில் விம்முகின்ற ஏதிலியோர்
செம்மையுறச் செங்கோலும் சிறந்தோங்க சீறிச்சினந்தே
அம்பலத்தில் ஆடரசன் அனலெடுப்பான் பாருங்கள்!

மரித்துவிட்ட மாதரவர் மகத்தான பிடிசாம்பல், 
இருக்கின்ற மங்கையரை எருவாகித் தாங்கிடவே,
சிரித்தபடி சீரழிக்கும் சிந்தனையைத் தான்பொசுக்க
எரிதழலை ஈசான்யன் ஏந்திடுவான் பாருங்கள்!

வாளெடுத்தே வீசுகின்ற மன்னவனோ நானில்லை;
தாளெடுத்துத் தீந்தாவால் தந்துவிட்டேன் ஓர்பாட்டு;
ஊளையிடும் நரிக்கூட்டம் ஒடுங்கிவிழ வேயுறு 
தோளிபங்கன் சூலத்தால் துளைத்தெடுப்பான் பாருங்கள்!

தங்கமலர்த் தங்கையரை சதிசெய்தே அழித்தோரை,
மங்கையரின் மானத்தை மாய்தெரித்தே சிரித்தோரை, 
நங்கையரை துய்த்தழித்தே நாசமும் செய்தோரை, 
சங்கரியின் சிவநேசன் சங்கறுப்பான் பாருங்கள்!
=====================================
இராச தியாகராசன்.

பிகு:
====
கூத்துவல்யன் - கூத்தன், எக்கலித்தல் - கெக்கலித்தல், 
ஈசானியன் - ஈசான மூலையின் தலைவன்(ஈசன்), தீந்தா - எழுதுமசி, 
வேயுறு தோளிபங்கன் - மூங்கிலொத்த தோளுடை மாதொரு பாகன்.
சங்கறுப்பான் - அழித்தொழிப்பான்.

திங்கள், 15 ஜனவரி, 2024

விளைகின்ற மாறா வினை....

நெருங்கிய ஒருவரின் ஈருந்து விபத்தினைப் பற்றி அறிந்த தாக்கத்தால் வனைந்த வரிகளிவை.  எவ்வளவு சொன்னால் என்ன? எவ்வளவு செய்தால் என்ன? மீண்டும் மீண்டும், தலைக்காப்பணிய இளையோர் தவறுகின்றனரே! 
======================================











======================================
விளைகின்ற மாறா வினை...
(கலிவெண்பா)
======================================
வாழ்வென்ப தார்வமொடு வாகாகத் தானமர்ந்தே
சூழ்நிலையைச் சுற்றமதைச் சோர்வகலத் தான்மறந்தே
மூழ்கியெழத் தித்திக்கும் மோகவலை காட்சியன்று: 
வாழ்ந்திருக்க வந்தவொரு மாண்புமிகு வாய்ப்பன்றோ?

சென்றதையே நீரெண்ணிச் சிந்தித்தே மீள்பதிவாய்
இன்றுளத்தில் கண்டிடலாம்! எந்நாளும் உண்மையிது!
அன்றங்கே சென்றிடவே ஆராலும் ஆகாதே
என்றவொரு மெய்யதனை எல்லீரும் தானுணர்வீர்!

மன்பதையில் வந்துவிட்ட மாந்தர்கள் வாழ்வினிலே
சென்றதெலாம் மீளாமல் சீக்கிரமே சென்றதுவே!
தன்கணினி மீட்டிரும்பத் தட்டுவிசை என்றிங்கே,
உன்வாழ்வில் ஏதுமிங்கே உண்டோமோ சொல்வீர்!

களிப்புடனே இன்றுதலைக் காப்பின்றிச் செல்லும் 
இளையோரே; எல்லா மெனக்கென்னு மிந்த  
வளையாத ஆணவத்தால் மாயந்தழித லென்றும்
விளைகின்ற மாறா வினை.
=====================================
இராச தியாகராசன்

பிகு:
====
மோகவலைக் காட்சி =  இனிய இணையக் காட்சி
எல்லீரும் = எல்லாரும்
மீட்டிரும்பு விசை = மீள்திரும்பு விசை (back space)

வாழ்த்து தரும் நாளிதுவே...

அனைவர்க்கும் இனிய உழவர்த் திருநாள், தமிழர்த் திருநாள், பொங்கல் திருநாள், திருவள்ளுவர் நாள் வாழ்த்துரைக்கிறேன்.  வாழிய வளத்துடன் பல்லாண்டு.
=========================================













=========================================
வாழ்த்துதரும் நாளிதுவே....
==================================================
வெள்ளிநிற மலைமுகட்டு வியன்தமிழின் நாளிதுவே;
கள்ளமிலா தன்புமிளிர் கனித்தமிழின் நாளிதுவே; 
பள்ளுடனே பாடிமகிழ் பைந்தமிழின் நாளிதுவே; 
தெள்ளுறுதித் தூயமனத் தென்தமிழின் நாளிதுவே! 

கண்மயங்கக் காதலரும் களிக்கின்ற நாளிதுவே; 
வெண்ணிலவு நங்கையரும் விழைகின்ற நாளிதுவே; 
பண்ணிலங்கக் காளையரும் பாடுகின்ற நாளிதுவே; 
எண்ணமுறை தீந்தமிழில் இசைக்கின்ற நாளிதுவே! 

மண்ணுலகின் மருவில்லா வண்டமிழின் நாளிதுவே; 
தண்ணிலவாய் ஒளிவீசும் தண்டமிழின் நாளிதுவே; 
நண்ணுகின்ற நல்லறத்து நற்றமிழின் நாளிதுவே; 
உண்மையொளிர் ஆற்றலுறை ஒண்டமிழின் நாளிதுவே! 

துள்ளிவருங் காளையுடந் தூதுவிடும் நாளிதுவே: 
அள்ளிவளர் அன்னைமகிழ் ஆர்தமிழின் நாளிதுவே; 
புள்ளியிடுங் கோலமெழிற் பொங்கலிடும் நாளிதுவே; 
வள்ளையொடு கும்மியுடன் வாழ்த்துதரும் நாளிதுவே! 
====================================================
இராச. தியாகராசன்

பிகு:
====
பள்ளு - ஆனந்தப் பாட்டு, பைந்தமிழ் - பசுமை+தமிழ், வண்டமிழ் - வளமை+தமிழ், தண்டமிழ் - தண்மை+தமிழ், நற்றமிழ் - நல்ல+தமிழ், 
ஒண்டமிழ் - ஓண்மை+தமிழ், தெள்ளுறுதி - தெளிந்த உறுதி, நண்ணுகின்ற - பொருந்துகின்ற, (வள்ளை/பள்ளு/கும்மி/தெம்மாங்கு - சிந்துப்பா வகையின).

செவ்வாய், 26 டிசம்பர், 2023

ஆழியே கேளாய்...

ஆழியின் சீற்றம் வந்தநாள் காலையில், ஒரு பாவரங்கில் இருந்தோம்.  புதுச்சேரி ஆழிநீர் உள்வாங்கியதைக் கேள்வியுற்றதும், உடனே கடற்கரைக்கு ஓடிச் சென்று, ஆழியது நீள உள்வாங்கி இருந்ததையும், சேற்று மண்ணில் சேல்கள் துடிப்பதையும் கண்டோம்.  இறங்கி நடக்கலாம் என்று தோழர்கள் சொன்னதை நானேற்கவில்லை.  ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிட்டதாக என்னுளம் பதறியது.  உள்வாங்கிய நீர் மீண்டும் திரும்பும் என்று கூட தோன்றியது.  அன்று மாலையில் நான் நினைத்தது மெய்யானது.  ஆனால் அதைவிடப் பேரிடர் சேதியாக இந்தோனேசியா, தாய்லாந்து,  இலங்கை நாடுகளில் ஏற்பட்ட பேரழிவும், நாகையின் சின்னாபின்னமும் வந்து உலுக்கியது.  அன்று நானெழுதிய பாடலிது.
===================================












===================================
ஆழியே கேளாய்....
==================
வங்கக் கடற்கரை வாழும் எம்மின;
மங்காப் புகழ்சேர் மறவர் தமிழினச்
சங்காய் முழக்கிய தமிழர் மாநகர்!
எங்கு மோடிய நாவாய் நிறைந்தே 
அலைகட லோரம் அழகின் உருவென
கலைகளும் புதுக்கியக் காவிரிப் பட்டினம்!
எத்தனை முறைதான் எழுந்தே பொங்கி,
முத்தாம் தமிழின் மேன்மை ஏடுகளுன்,
பானை வயிறே புடைக்க எடுத்தே,
ஆனைப் பசியற அள்ளித் தின்றாய்?

முன்னம் முடியா இலக்கியந் தேடியா,
இன்ப வாழ்விலுங் குளிர்ந்த சாவிலும்,
விரிகடல் நோக்கி விழியினைப் பதிக்கும்,
பரதவ மக்களும் புதைந்து போகவே,
சுடர்விழி மழலைகள் சிதைந்து போகவே,
விடியலில் மீண்டும் வெடித்தே எழுந்தாய்?
தாழாத் தமிழின் மேன்மை மறந்த,
சூழும் இருளாய்ச் சிந்தனை நிறைந்த,
கட்டும் அறுந்த கட்டு மரமென,
கெட்டே அழியும் குணமில் தமிழர்

வாழக் கண்டோ வெகுண்டே எழுந்தாய்?
கோழைக் கடலே தவறு செய்தாய்;
நெடித்தே எழுந்துன் நெடுந்தி ரையாலே
கடிதில் கொன்றது குற்ற மற்ற
பிஞ்சுகள்; பெண்டிர்; உன்றன் மக்கள்!
கெஞ்சி உனையே வேண்டு கின்றேன்!
தெண்டிரை சூழ்ந்த புவிய கத்தையே,
வண்டமிழ் வாழும் தென்ன கத்தையே,
வென்றே அழிக்க எழுந்தே சீறிநீ 
என்றுமே தொடாதே! என்றுமே தொடாதே!
=================================
இராச தியாகராசன்

பிகு:
====
நாவாய் - கப்பல், புதுக்கிய - புதுப் புனைவாக்கிய
மன்பதை - உலகு, குணமில் - பண்பில்லா,
நெடுந்திரை - நெடிய அலை, கடிதில் - விரைவில், 
தெண்டிரை - தெள்ளிய அலை.

நாவினிக்கும் பாட்டிசைத்தேன் நான்...

இன்றைக்கு, ஏழைகளின் ஏந்தல், பொதுமையார்வலர், அன்பின் திரு இரா. நல்லக்கண்ணு புவியில் உதித்த நாள்.  சொத்து/ பதவி/ பட்டம்/ எதற்கும் மயங்காமல், காந்தியண்ணலைப் போலவே எளிமையுடன் வாழ்த்திருக்கும் அந்நல்லவரின் பிறந்தநாளில், இந்தச் சிறிய  பாவலன் வாழ்த்துரைக்கிறேன்.
=====================================












=====================================
நாவினிக்கும் பாட்டிசைத்தேன் நான்...
=====================================
குன்றிலிட்ட விளக்கெனவே கொள்கைக்காய் எந்நாளும்,
இன்றுலகில் வாழுமெங்கள் ஏந்தலே! - என்றும்உம்
பண்பதுவால் நீவிரிங்கு பாரதத்தை ஆள்கவென, 
ஒண்மைமிகு வண்ணஞ்சேர் ஒண்டமிழில் வாழ்த்துகிறேன்.

பற்றில்லா(து) இன்றேழை பாழைகட்காய் முன்நிற்கும்
பொற்பின் பொதுவுடமைப் போர்வேந்தே! - வற்றா
வளங்களுடன் என்று முயர்கவென இற்றைக்(கு)
இளமையொடு நின்றிலங்கும் எந்தமிழில் வாழ்த்துகிறேன்.

செந்தமிழிற் சொல்லெடுத்துச் சீரசையைச் சேர்த்தடுக்கிச் 
சிந்துகவி நான்செய்தல் சீரெனினும் - நொந்தவர்க்காய்ச் 
சுற்றிச் சுழன்றிங்கே தொண்டாற்றுந் தூயவரே;
குற்றமிலா நும்பொதுமைக் கொள்கைக்காய் வாழ்த்துகிறேன்.

பீடுறையும் கொள்கையின் பேரிலங்கும் ஆர்வலரே;
பாடுறும் ஏழைகட்காய் பங்கெடுத்தோய்! - நீடுபுகழ்
யாவையுமே உம்மிடத்தில் ஈண்டுலகில் சேர்ந்திடத்தான்  
நாவினிக்கும் பாட்டிசைத்தேன் நான்.
===========================================
இராச தியாகராசன்

பிகு:
===
ஏந்தல் - புகழுக்குரியோர், ஒண்மை - ஒளிர்வு, 
ஏழைபாழை - ஏழ்மையிலுழலும் தாழ்வுற்றோர்,
பொற்பு - சிறப்பு, இலங்குதல் - தனிப்பட நிற்றல்,
பீடு - புகழ், பாடுறும் - துன்பமுறும். 


செவ்வாய், 19 டிசம்பர், 2023

தேடுங்கள் மானிடரே தேடுங்கள்..

சாதிமதச் சழக்குகளைப் புறந்தள்ளி, பேர்புகழைப் பாராமல், புகழ்/பதவியொன்றே குறிக்கோளாய் வாழாமல், அறவழியே மேன்மையெனக் கொண்டு, மாசுகளில் உழலாமல், மமதையிலே வீழாமல், வித்தகியின் திருவடியைத் தேடுங்கள் உலகீரே!
====================================













====================================
தேடுங்கள் மானிடரே தேடுங்கள்.....
====================================
அறிவென்னு மற்புதத்தை ஆழ்ந்துணர வகையின்றி,
வெறுப்புவளர் சாதிமத  வேற்றுமையே மெய்யென்று,
முறிக்கின்ற மோகத்தில் மூங்கையென உழன்றுநிதம்,
அறமென்னு(ம்) ஆடகத்தை அழிப்பாரே தேடுங்கள்!

சேரிடமு மறியாமல், தேர்ந்தெடுக்கத் தெரியாமல்,
ஆரென்ன சொன்னாலு(ம்) அகமயக்கந் தலைக்கேறப்
பாரினிலே விருதுகளைப் பதவியினை வேட்டையிட்டு,
பேரன்பை மிதிக்கின்ற பேதைகளே தேடுங்கள்!

வரிக்கின்ற நட்புமெது; வாய்த்திருக்குஞ் சுற்றமெது?
எரிக்கின்ற ஏக்கழுத்த இறுமாப்பின் விளையாட்டால்,
அரிக்கின்ற வினையறவே, அழிவில்லா மோனத்தில்
சிரிக்கின்ற சீரணங்கின் திருவெழிலைத் தேடுங்கள்!

கூட்டமாய்க் கூடியே குற்றத்தில் முக்குளித்து,
வாட்டியே வேரறுக்கும் மமதையின் விளையாட்டால், 
மூட்டிவிட்டச் செந்தழலாம் முடிவென்னும் பாசத்தால்
ஆட்டுகின்ற காளியவள் அருளமுதைத் தேடுங்கள்!

பாதையதை மறந்திங்கு பாழ்வெளியாம் மயக்கமெனும்
போதையிலே குளியலிடும் பூவுலகின் மானிடரே;
சாதலெனும் மெய்யென்றே சத்திய மென்றுணர்ந்தே
ஆதியவள் நேரன்பை அன்றாடந் தேடுங்கள்!

குத்துக் காலிட்டக் குழலெழிலைத் தேடுங்கள்;
அத்தன் மயங்குகின்ற அன்புருவைத் தேடுங்கள்:
நத்தும் புல்லாக்கு(ம்) ஒளிரெழிலைத் தேடுங்கள்;
சித்துகள் புரிகின்ற சீருருவைத் தேடுங்கள்!

வித்தைகள் காட்டுகின்ற வித்தகியைத் தேடுங்கள்;
சித்தம் சிலிர்க்கின்றச் சித்தினியைத் தேடுங்கள்;
தத்தை தோள்சேர்ந்தச் சங்கினியைத் தேடுங்கள்;
நித்தம் நிறைவுதரும் நேரிழையைத் தேடுங்கள்!

பித்தம் அறுக்கின்ற பேரெழிலைத் தேடுங்கள்:
கத்தும் கடல்நோக்கும் கன்னிகையைத் தேடுங்கள்;
நித்தில மாலையணி நிரந்தரியைத் தேடுங்கள்:
புத்தம் புரியிலுறை பூவிழியைத் தேடுங்கள்! 

செறிவான வாழ்வுதருந் தேனம்மை தேடுங்கள்;
அறம்வளர் அன்புருவ அழகம்மை தேடுங்கள்;
கறையில்லாக் காலனுறை கண்ணம்மை தேடுங்கள்;
மறைவடிவி லாள்கின்ற மங்கம்மை தேடுங்கள்;

கோதில்லாச் சீரிலங்குங் கொற்றவையைத் தேடுங்கள்;
காதலொடு மாகாலன் காப்பவளைத் தேடுங்கள்;
மாதொரு பாகனவன் மாதவளைத் தேடுங்கள்;
ஆதியெனும் ஆனந்த ஆரமுதைத் தேடுங்கள்!

ஈசனவன் இல்லாளை இடையறாது தேடுங்கள்; 
மாசில்லாச் சோமனுறை வஞ்சியினைத் தேடுங்கள்;
ஊசிமுனை தவம்செய்யு(ம்) உலகம்மை தேடுங்கள்;
சாசுவத தெய்வமாஞ் சக்தியைத் தேடுங்கள்!

சிரிக்கின்ற சங்கரியிஞ் செங்கழலைத் தேடுங்கள்;
கருணையுடன் காக்கின்ற கருமாரி தேடுங்கள்;
வரமருளும் மாரியெங்கள் வாரிதியைத் தேடுங்கள் 
திருவளர் செல்வியின் திருவடியைத் தேடுங்கள்!
==========================================
இராச தியாகராசன்

பிகு:
====
அத்தன் - சீர்காழி அத்தன்
நத்து/ புல்லாக்கு - பழந்தமிழ் மகளிரின் அணிகலன்.
தத்தை - கிளிப்பறவை
புத்தம்புரி இல் - புதுமையான வீடு
ஏக்கழுத்தம் - தானெனும் அகந்தை (ஈகோ)
இறுமாப்பு - தற்பெருமை
பேதை - அறிவிலி
ஆடகம் - பொன்
பாசத்தால் - பாசக் கயிற்றால்
மூங்கை - ஊமை
கோது - குற்றம்

செவ்வாய், 28 நவம்பர், 2023

வளஞ்சொரியும் பாப்புனைய வாரீர்...

நந்தமிழரே!  வளஞ்சொரிகின்ற பாப்புனைய வாரீர்.
=================================================




=====================================
வளஞ்சொரியும் பாப்புனைய வா!
============================================
துள்ளிவருங் குற்றாலத் தூயமலைச் சாரலதாய், 
வெள்ளியிழைப் போல்மின்னும் விண்முகிலின் தூரலதாய், 
வெள்ளைநிறத் தெண்டிரையின் மீனிலங்கு வாரிதியாய், 
அள்ளியிட்ட நித்திலத்துப் பொன்வண்ணத் தாரகையாய், 

கொடிமுல்லை சிந்தும் குளிர்மணத்தை வார்த்தே, 
அடிவானஞ் சொட்டும் அடரழகைச் சேர்த்தே, 
விடிவெள்ளி போல்நித்தம் பொன்னெழிலும் பூக்க, 
முடிபுனைந்த மூவேந்தர் முத்தமிழைக் காத்ததுபோல்,

பொற்றமிழைக் காக்கவிங்கு பொற்பனைத்தும் பெற்றிலங்கி, 
வெற்றித் தமிழோங்க வேங்கையென முன்னெழுந்தே, 
வற்றாத சீரிளமை வாய்த்திருக்குந் தாய்மொழியாம், 
நற்றமிழை நந்தமிழர் நாளுமிங்கே போற்றி, 

நெளிவில்லா நேர்மையொடு நெஞ்சகத்தால் ஏந்தி,
தெளிவாகச் சிந்தித்தே செந்தமிழில் நீந்தி, 
அளிக்கின்ற அன்னையவள் அன்பினையே சீந்தி, 
வளஞ்சொரியும் பாப்புனைய வா.
============================================
இராச தியாகராசன்

பிகு:
=====
நித்திலம் - ஆணிமுத்து
தெண்டிரை - தெள்ளிந்த அலை
அடரழகு - நிறைந்த எழில்
பொற்றமிழ் - பொன்+தமிழ்
பொற்பு - சிறப்பு
சீந்தி - போற்றி.

செவ்வாய், 21 நவம்பர், 2023

தீக்கவியோ இவன்....

சிந்துவேந்தனின் நினைவு நாள் (செப்தெம்பர் 11ஆம் நாள்). 
====================================













====================================
தீக்கவியோ இவன்
(கட்டளைக் கலித்துறை)
=======================
வேந்தர் களின்புகழ் வீச்செ னவேதமிழ் மேகமென,
பூந்த ளிரும்நிறை பூம்பொ ழிலாய்ப்பாப் பொழிந்திடவே 
தீந்த மிழுந்தருந் தேன முதாய்ப்பலர் சீந்துகின்ற 
ஏந்த லெனுமுயர் ஏழு லகப்புகழ் ஏந்திவிட்டாய்! 

ஆத வனாயொளி வீசும் அனற்கவி யாற்றலுடன்,
நாதி யிலாதவர் தாழ்ச்சி யெனும்நிலை மாற்றிடவே;
சாதி யதைப்பெருந் தூசெ னவேபலர் போற்றிடவே;
பேத மிலாதினி வாழ்க வெனக்கவி சாற்றிவிட்டாய்!

மாத வமாய்வளர் ஆற்ற லுடந்தமிழ் மாந்தியதால்
காத லனாயுயர் கண்ண னிடம்மையல் காட்டியதால்,
வீதி யுலாவரும் தேர தனைநிகர் வேந்தனென, 
மேதி னியேபுகழ் கோகி லமாயிசை மீட்டிவிட்டாய்!

சூது களையனற் சூரி யனாய்நிதஞ் வேட்டெடுத்தே, 
பூத லமுமுனை போற்றி டவேதமிழ் பெய்துநிதம், 
ஏதி லியாயழு மேழை களின்பகை சுட்டெரிக்க, 
நீதி யதைச்சொலும் நேர்மை யெனுங்கவி நெய்துவிட்டாய்!

தேய முயர்ந்திடச் சீர்க ளியற்றிய தேன்கவியே!
தூய மனம்பெறச் சோர்வை யகற்றிடுந் தூண்கவியே!
சீய மெனமதச் சீக்கை எரித்திடுந் தீக்கவியே! 
நீயி னிதுஞ்சிட நேர மிலையெனும் நேர்க்கவியே!

தீமை யெரிந்திடத் தீர்வு மெழுதியத் தேர்க்கவியே! 
பூமி யதன்கொடுங் கோல முரைத்திடும் போர்க்கவியே!
சீமைய ளந்திட வேண்டிய நூதனச் சீர்க்கவியே! 
ஆமினி வெஞ்சினக் கால மிதுவென ஆர்க்கவியே!
======================================
இராச தியாகராசன்.

பிகு: 
சீந்துகின்ற = போற்றுகின்ற, கோகிலம் = குயில்

வியாழன், 16 நவம்பர், 2023

சலிக்காது உழைத்த சங்கரையா..

நானிங்கே பேசுவது திராவிட அரசியலில்லை; தமிழ் தேசிய அரசியலில்லை; எதிர்க்கட்சியான பேராயாயர் கட்சியின் குற்றச்சாட்டில்லை; பொதுவுடைமை கட்சியின் கோரிக்கையுமில்லை.  நான் பேசுவது அறம்.  இதற்கும் முட்டுக் கொடுக்க மூளைச் சலவை செய்யப்பட்டவர் ஆயிரம் பேர் வரலாம்.  என்ன செய்வது நாட்டின் நிலை அப்படி இருக்கிறது.  

விடுதலைப்போரில் ஈடுபட்டுச் சிறைசென்ற வீரரென்றாலும் சரி, நாளும் மக்களுக்குழைத்த மாமனிதர் ஆனாலும் சரி, வெறும் வெள்ளைத்தாள் முனைவர் பட்டக் கோப்பில் கூடக் கையெழுத்திட மாட்டேன் என்னும் அரசின் ஆளுநர்க் கொள்கை.  மேதகு ஆளுநருக்கும், ஆளும் அரசுக்கும் ஆயிரம் கருத்து வேற்றுமை இருக்கலாம்.  ஆனால் ஒரு ஈகியருக்கு வெள்ளைத்தாள் பட்டமளிப்பது அவ்வளவு துன்பந் தரும் செயலா?  உள்ளம் மிக வருந்துகிறது.  தகைசால் அறிஞர்திருமிகு சங்கரையா இறந்த சேதி கேட்டு என்னுளத்தில் முளைத்த ஒரே வினா இது.  நீங்கள் எந்த கொள்கை, எந்த கட்சி, என்றாலும், ஒரேயொரு நொடி சிந்தியுங்கள், இது சரியாவென்று. 

இஃதென்னுடைய பக்கம் எனக்கு அறமெனப்பட்டதை எழுதுகிறேன்.  உள்ளம் வருத்தும் இரங்கல் சேதியில், ஒரு செயலின் அறமற்ற தன்மையை, கட்சி கட்டிக் கொண்டு, முட்டுக் கொடுக்கவரும் தோழமை/சுற்றத்தவர் அவரவர் பக்கத்தில் செய்து கொள்ளுங்கள்.  என்ன சொல்லுவீர்கள் நானொரு திராவிடன்/ கொம்மி/ நக்சலைட்டு/ டம்ளர்/காங்கி கசுமாலம் என்றுதானே.  சொல்லிக் கொள்ளுங்கள்:
===================================
"நேற்றுபோல் இன்றில்லை; நிகழின்று நாளையில்லை;
சேற்றிலே மலர்ந்தாலும் செம்மலர்க்கும் புகழுண்டு!
ஆற்றல்தான் அவனியிலே அணியென்று வாழ்பவன்நான்;
கூற்றுவனும் தலைவணங்கி கொடிபிடிப்பான் எனக்கென்றும்!

எவரென்ன சொன்னாலும், இன்றிங்கே குட்டைமதிற்
சுவரென்று வைதுநிதம் துரத்தியெனை யடித்தாலும்
அவனியிலே எனக்குநிகர் ஆருண்டு? உணர்ந்துநிதம் 
உவகையுடன் வாழுமெனக்(கு) ஓங்கலதும்  என்வசந்தான்!"
===================================

அவர்தம் மறைவால் அல்லலுறும் அவரதம் தொண்டர்கள், தோழமை, சுற்றத்தோர் அனைவருக்கும் என்றன் உளம்பற்றிய ஆழ்ந்த இரங்கல்.  இந்தப் பேரிழப்பைத் தாங்கும் வல்லமையை எல்லாம் வல்ல வித்தகியே அளித்திட வேண்டுகிறேன்.
===================================













===================================
சலிக்காது உழைத்த சங்கரையா
===================================
நந்தமிழ் விளங்கெழிலாய் நலந்தருகும் இந்நாள், 
எந்நாள், பொன்னாள் என்றெல்லாம் எண்ணாமல் 
இந்நாட்  டேழைகளின் ஏந்தலெனச் சங்கரையா, 
முந்தி முழுநேரம் முகஞ்சலிக்கா துழைத்தீரே!

மமதையுடன் நானென்னும் மந்தமன மேட்டிமையை, 
அமைதியோ டுறுதிமிக அறுத்தெறிந்து வாணாளில், 
நமதிந்திய மாந்தரிங்கே நன்னலமாய் வாழநிதம் 
சமதைமெனும் பொதுமைவழி தத்துவப்போர் புரிந்தீரே!

மேவுநிலா இறைக்கின்ற வெளிச்சவிதை தருகின்ற, 
பாவியத்தைப் பாட்டியலை பாவழங்கும் பாவினிப்பை,  
காவியத்தைக் கனவுலாக் கவிவடிக்கக் கவிஞருண்டு;
பூவுலகின் ஏழைகட்காய்ப் பொங்கயினி எவருண்டு?

ஞாலத்தில் ஏதிலிகள் நெஞ்சகமே நெக்குவிடக் 
கோலவெழிற் குவலயத்தோர் குன்றியே குமைந்துருகக் 
காலமெனுங் கரையான் கரைத்தரித்தே தின்றதுவோ?
சால்பறவே மூப்பதுவும் சாக்காடும் வென்றதுவோ?
 
வனைகின்ற வரிகளிலே வெறுமையதும் சுழன்றுழலப் 
புனைகின்றப் பாக்களிலே பொலிவதுவும் கழன்றுவிழ, 
நினைவுகளில் மங்குமுளம் நெருப்பினிலே துடித்தழுகக் 
கனலொன்றின் சுடரொளியுங் காற்றேறிச் சென்றதுவோ?
===============================
இராச தியாகராசன்

பிகு:
ஏந்தல் = தலைவர்/ சான்றோர்,
ஏதிலி = ஏதுமற்றோர்/ ஆருமில்லார்
நெக்குவிட = விரிசலேற்பட
குமைதல்= உள்ளுக்குள் உருகியழுதல்
குவலயம் = புவியகம்/ புவியகத்தோர்
சால்பு = சிறப்பு/ பெருமை
மூப்பு = முதுமை
சாக்காடு = இறப்பு 

திங்கள், 13 நவம்பர், 2023

தூந்திரத்தில் வாழ்குவரோ...

அனைத்தையும் அழித்துவிட்டு, மக்களையும் மாய்த்துவிட்டு, தூந்திர வெளியில் வாழ்வாரோ..
================================

================================
தூந்திரத்தில் வாழ்குவரோ?
==========================
நாடுகின்ற நியாயங்கள் நான்காயிரம் இருக்கலாம்;
தேடுகின்ற நீதியுனைத் தீயெனவே தகிக்கலாம்;
மூடிவைத்த கேள்விகளும் முன்னெழுந்தே எரிக்கலாம்;
ஆடுகின்ற ஆசதுவும் அனலெனவே அரிக்கலாம்!

அடுத்தவரின் உயிரழித்தே அழவைக்கும் அதிகாரம்
கொடுத்தவர் யாருனக்கு? கூற்றுவனா நீயிங்கு?
காடுகளில் வாழ்கின்ற கானுயிரும் கணக்குடனே
கூடிநிதம் தன்பசிக்குக் கொல்லுகையில் ஐயகோ!

காழ்ப்பதனால் நாடழித்தே காடாக்கி அழிப்போரும், 
பாழ்குணத்தால் பாலையெனப் பாரழித்தே பார்ப்போரும், 
வாழ்கின்ற மக்களையே வஞ்சினத்தால் மாய்ப்போரும், 
ஊழ்த்துவிட்ட உலகினிலே ஒற்றுமைக்கும் வழியேது?

வேந்தனென மற்றவரை வீழ்த்தியிங்கே மார்த்தட்டி,
மாந்தரின மத்தியிலே வாழ்கின்ற பேர்மட்டும்
சாந்தியதும் சத்தியமும் செத்துவிட எவருடனே
தூந்திரத்தில் வாழ்குவரோ சொல்லிடுவீர் மானிடரே!
==================================
இராச தியாகராசன்

பிகு:
தூந்திரவெளி = ஆளில்லாப் பனிவெளி.

புதன், 8 நவம்பர், 2023

வாணியின் வரம்...

2012இல் எழுதிப் பகிர்ந்த கலிவெண்பா இந்தப் பாடல்.   எனக்குள் என்னை நானே தேடிய போதில், கலைவாணி தந்த வரம்.  இரண்டு பத்திகள் சேர்ந்திருக்கிறேன். (இன்னமும் தேடுகிறேன் என்பது வேறு!!)
===================================












===================================
வாணியவள் தந்தாள் வரம்...
===========================
இளமையே அள்ளும் எழிலார் தமிழால், 
வளமையே துள்ளும் மணக்கும் வரியால்,   
உளமே கவர்ந்த உரிமைக் கவிகாள்; 
தளராத சொல்லின் தழல்நிகர்ப் பாவலன்நான்!

செந்தமிழின் சொல்லெடுத்துச் சீரசையைச் சேர்த்தடுக்கி, 
நந்தமிழில் நாளெல்லாம் நற்றமிழ்ப் பாவெனவே 
சிந்துகவி செய்கின்ற தீந்தமிழின் ஆர்வலரே; 
சந்ததமாய் சிந்துமெழிற் றண்டமிழின் பாவலன்நான்!

உள்ளமே பொங்கும் உணர்வின் வழியிலே, 
வெள்ளமாய் மின்னும் வெளிச்சப் பொறியெனத் 
துள்ளிடுஞ் சொல்லைச் சொடுக்குங் கவிகளே;
பொள்ளிடும் பாட்டாற் பொசுக்கிடும் பாவலன்நான்!

பாணனில்லை பல்கருவிப் பண்ணிசைக்க; மீனவனாய்த்
தோணியுடந் துள்ளுமீன் தூண்டிலிடும் ஆளுமில்லை;
தூணதுவே தூளாகத் தோன்றிவிட்டச் சிங்கனில்லை;
காணுவதில் ஆழ்ந்தே கவிபாடும் பாவலன்நான்!

உள்ளத்தில் தோன்றுவதை ஊதுவுலைத் தீயிலிட்டுக்
கள்ளமெனுங் குற்றங் கருங்கசடு தான்பொசுங்க 
அள்ளும் அழகாரும் ஆசுகவி நெய்திடவே 
துள்ளித் துடிக்கின்ற தூயமனப் பாவலன்நான்!

வெற்றிகளைத் தேடியிங்கு வேட்டையிடும் மன்னனில்லை;
உற்றதெனச் செல்வத்தை; ஊர்மயங்கும் பேரழகைப்;
பெற்றுவிட ஆர்வமில்லை; பேர்புகழில் நாட்டமில்லை;
கற்றதமிழ் ஓங்கிடத்தான் காத்துநிற்கும் பாவலன்நான்!

ஆணிப்பொன் நட்பென்னும் அன்பருவிச் சாரலிலே, 
மாணிக்கச் செந்தமிழில் மாலையென நான்தொடுத்தே, 
நீணிலத்தோர் தான்மயங்க நீள்கவிதை நான்வனைய,
வாணியவள் தந்தாள் வரம்.
========================================
இராச. தியாகராசன்

செவ்வாய், 7 நவம்பர், 2023

பொழிலுருவே வாழ்வியலோ...

உளமே மொழியாய், முழவே வழியாய், வளியே இசையாய், சிவமே அறிவாய், எழிலே இதமாய், கரையே மடுவாய், கலையே உறவாய், அழலே அழகாய், பொழிவே அமுதாய், பொழிலே உருவாய் அமைந்த வாழ்க்கை.
=============================













=============================
பொழிலுருவே வாழ்வியலோ...
=============================
ஓளியே விழியாய், விழியே உளமாய், 
உளமே மொழியாய், மொழியே தமிழாய், 
தமிழே உழவாய், உழவே முழவாய், 
முழவே வழியாய், வழியே வெளியாய், 

வெளியே உள்ளாய், உள்ளே வளியாய், 
வளியே இசையாய், இசையே புவியாய்ப் 
புவியே நிறமாய், நிறமே சிவமாய்ச் 
சிவமே அறிவாய், அறிவே தழலாய்த் 

தழலே உணர்வாய், உணர்வே எழிலாய், 
எழிலே இதமாய், இதமே கருவாய்க் 
கருவே கடலாய், கடலே கரையாய்க் 
கரையே மடுவாய், மடுவே மலையாய், 

மலையே உலகாய், உலகே கலையாய்க் 
கலையே உறவாய், உறவே நிழலாய், 
நிழலே நிசமாய் நிசமே அழலாய், 
அழலே அழகாய், அழகே செழிவாய்ச்  

செழிவே செறிவாய் செறிவே பொழிவாய்ப்  
பொழிவே அமுதாய் அமுதே மழையாய், 
மழையே உலகாய், உலகே பொழிலாய்ப் 
பொழிலே உருவாய், உருவே வாழ்வோ!
===================================
இராச. தியாகராசன்.

வியாழன், 2 நவம்பர், 2023

இறையென்னும் மெய்ம்மை...

எங்கும், எதிலும், ஏழையின் சிரிப்பிலும், சிந்தனைத் தெளிவிலும், தனிமையின் இனிப்பிலும் இருப்பவர் இறைவன்....
==============================










===============================
இறையென்னும் மெய்ம்மை....
==============================
இறைவன் என்பவர், 
பாடலில் பிறப்பார்; 
ஆடலில் தெறிப்பார் - அப்படிப் 
பாட்டிலே, கூத்திலே 
பளீரென்றுஞ் சிரிப்பார்!

இறைவன் என்பவர், 
துரும்பிலும் உறைவார்; 
தூணிலும் மறைவார் - இப்படித் 
தூணுக்குப் பின்னிருந்தே 
எட்டியும் பார்ப்பார்! 
=======================
இராச. தியாகராசன்.

கயலெனவே உள்ளந்தான் துள்ளுதடி...

இயற்கையெழிலால் நாவினில் பண்ணும் துள்ளும்; நித்திலத்தின் நிறம்பூத்துக் கொள்ளும்; காதலதை அள்ளியிட்டு என்னுளத்தை அள்ளும்; உள்ளமதும் எத்தனையோ உள்ளும்; அஞ்சுகமுன் நினைவோ உள்ளத்தை பொள்ளும்; பொழிந்திட்ட முத்தங்கள் முள்ளெனவே நுள்ளும்; தேவதையாள் தேன்குரலோ நாவினிக்கும் நாதத்தை விள்ளும்!
========================================












========================================
கயலெனவே உள்ளந்தான் துள்ளுதடி.....
==================================
பாவினத்தைப் பாட்டியலைப் பாவையரைப் 
பூவினத்தைப் பூம்பொழிலைப் புள்ளினத்தை 
ஆவினத்தை, ஆதவனைக் காண்கையிலே, 
நாவினிலே பள்ளுந்தான் துள்ளுதடி! 

வித்தகியின் விளையாட்டு வித்தையென, 
முத்தமிழும் நிறைந்திட்ட சித்தமதில், 
சித்திரத்துக் கயல்போலே பளிச்சென்று 
நித்திலத்தின் நிறம்பூத்துக் கொள்ளுதடி! 

புள்ளியிடத் தோன்றுமெழிற் கோலமதாய், 
வெள்ளிநிறப் பொன்நிலவோ பூமியிலே, 
கள்ளதனின் போதைநிகர் காதலதை 
அள்ளியிட்டே என்னினைவை அள்ளுதடி!  

சித்தமதில் தான்பதிந்தே சிந்தாமல், 
பித்தன்புத் தூரிகையாய்த் தீட்டுகின்றப் 
புத்தமுதக் காரிகையே உன்னெழிலால், 
எத்தனையோ உள்ளமதும் உள்ளுதடி! 

கொஞ்சியவள் விஞ்சியதால் காதலது 
மிஞ்சியநான் கெஞ்சியதும் எண்ணமெலாம்,
தஞ்சமென அந்நினைவுத் துயரமதும், 
அஞ்சுகமே என்னுளத்தைப் பொள்ளுதடி! 

பித்தனென நான்மயங்கிக் காய்கையிலே, 
நித்தமுமென் நெஞ்சகமே நெக்குவிட, 
சித்தினிநீ அன்றுதந்த செவ்விதழின் 
முத்தமெனை முள்ளெனவே நுள்ளுதடி! 

பாவனமாய்ப் பூத்தொளிரும் பாவையெனுந் 
தேவதையாள் தேன்குரலில் பாட்டிசைத்தப் 
பூவிதழே என்னுளத்தில் நாள்முழுதும்
நாவினிக்கும் நாதமதை விள்ளுதடி!  
===================================
இராச. தியாகராசன்

பிகு:
====
புள்ளினம் = பறவையினம் 
நித்திலம்= ஆணிமுத்து
நுள்ளுதல் = கிள்ளுதல்
உள்ளுதல் = என்றும் நினைந்துருகல்
அஞ்சுகம் = தத்தை
நெக்குவிடல் = விரிசலேற்படல்
பொள்ளுதல் = தழலாய்ப் பொசுக்குதல்

செவ்வாய், 31 அக்டோபர், 2023

என்னிடத்தே உண்டு...

இந்த தாடித் தாத்தனிடம் என்னவுண்டு?  நான் யார்?  இப்பெயர்  இவ்வுடலுக்கா அன்றி உயிருக்கா?  இப்புவியகத்தில் எதற்காக வந்தேன்?  என்னதான் செய்கிறேன்.  இந்தக்  கிழவனிடத்தே அப்படி என்னதான் உண்டு!
=================================









=================================
என்னிடத்தே உண்டு.....
======================
அள்ளி அரவணைத்தே அன்புதருந் துணையுண்டு;
துள்ளியே ஆடுகின்ற துடிப்புமிகு மைந்தனுண்டு;
உள்ளமதில் உரமுண்டு; உணர்வினிலே மெய்யுண்டு;
கள்ளமில்லாக் கருத்துண்டு; கறையில்லா நட்புண்டு!

புள்ளினத்தைப் பூவிதழைப் பொழிலூடு பொற்கதிரைக்
கொள்ளை கொள்ளுஞ் கொஞ்சுதமிழ் மொழியினிலே,
வெள்ளமெனச் சொல்லெடுத்து விருத்தமும் வெண்கலியும்,
வள்ளையுடன் வண்ணப்பா வடிக்கின்ற திறனுண்டு!

கள்ளதனை உண்டதுபோல் கண்டபடி உளறியிங்கு,
சுள்ளெனவே எந்நாளும் தூற்றிநிதம் ஏய்ப்பவரைப்
பள்ளிச் சிறுமியரைப் பாழ்படுத்தி மாய்ப்பவரைப்
பொள்ளிவிடும் பாவெழுதிப் பொசுக்கிவிடும் அறமுண்டு!

இயல்பின்றி இப்புவியி லெந்நாளும் அலைந்தலைந்தே,
மயங்கிக் கிடக்காமல் மாமலையாய் நிமிர்ந்திங்கே,
அயர்வின்றிக் கொண்டலது அமுதமழை பொழிவதுபோல்,
கயமையெனுங் கசடுகளைக் கருக்கிவிடக் கவியுண்டு!
=====================================
இராச. தியாகராசன்

பிகு:
====
புள்ளினம் - குருகினம், பொழிலூடு - எழிற்காவின் ஊடாக, 
பொள்ளுதல் - சுடுதல், கசடு - கோது/ பிழை.


சனி, 28 அக்டோபர், 2023

அரவமில்லா இரவுப் பொழுது..

இப்போது நகரத்தில், அரவமில்லா இரவுப் பொழுது எங்கே இருக்கிறது?  நாள் முடிவதோ நள்ளிரவு 1 அல்லது 1.30 மணிக்கு.  மீளவும் அதிகாலை 3 அல்லது 3.30 மணிக்கு.  இருந்தாலும் கவிதையென்பது நகர நரகத்துக்கு மட்டுமல்லவே!
=======================================











=======================================
அரவமில்லா இரவுப் பொழுது...
=======================================
அரவமில்லா இரவினிலும், 
இருள்வெளியின் கனவுதிக்கக் 
கனவினிலே மூழ்கியவர்,
நினைவுகளில் மாய்கின்றார்!

இளவயதின் எண்ணத்தில்
துளித்துளியாய்த் தளிர்க்கின்ற,
துயரோடும் சிந்தனையில், 
அயர்ந்தாடிச் சாய்கின்றார்!

நிழலெனவே நிதமலையும் 
பழகுசுகப் பார்வையதால்,
காதலெனும் கற்பனையாம் 
வேதனையில் வேகின்றார்! 

கடலெனவே ஓங்கியழும்,
உடலுருவ வேதனையால்,
காலமதே அரித்தழிக்குங் 
கோலமெனச் சோர்கின்றார்!

உணவின்றி உறக்கமின்றி,
பணமின்றி பண்புமின்றி,
உலகாய உணர்வுமின்றி, 
சீலமிலா தாடுகின்றார்!

தலைச்சுமையைப் பாராமல்,
அலைந்தலைந் ததன்மேலே
மலைபோலச் சேர்ப்பதுடன்,
உலைநெருப்பில் வீழ்கின்றார்!

களிபொங்கச் சினத்தீயில்,
அளைகின்ற மாந்தரிவர்,
முனைப்பின்றி முகப்பின்றி,
தனைமறந்தே போகின்றார்!

தயவுதிரும் போதினிலே
சுயமழியும் நேரமதில்
செயலிழந்து போகையிலே
அயலவரும் வருவாரோ?
==========================
இராச. தியாகராசன்

புதன், 25 அக்டோபர், 2023

பாரதி நான்மணி மாலை

உள்ளம் செய்யென்று சொன்னதால், பாரதி நான்மணிமாலை ஒன்றைக் கோத்திருக்கிறேன்.
========================================













========================================
பாரதி நான்மணிமாலை.
=======================
காப்பு
======
நோக்கறிய வைத்துவிடும் பாரதியென் வாக்கென்னும்
ஊக்கம் வளர்க்கும் ஒளி.
(பாரதி = மாகவி;  பாரதி = கலைமகள்)
 
வெண்பா
========
ஆணிப்பொன் ஆடகமா யள்ளியெனை ஆட்டுவிக்கும்
மாணிக்கப் பாவலனே  வண்டமிழின் காவலனே!
கேணி,நிலங் காளியிடம் கேட்டவனின் பாவெனக்கு
வாணியவள் தந்த வரம்.
 
கட்டளைக் கலித்துறை
======================
தேச மது(ம்)உயர் வுற்றி டவேவழி தேடியவன்;
நாச மறுநிலை யற்றி டவேதமிழ் நாடியவன்;
பாச மிகு(ம்)உளம் பெற்ற தனால்கவி பாடியவன்;
ஆசு களுமெரிந்(து) இற்றி டவேநட மாடியவன்!
 
எண்சீர் விருத்தம்
==================
சுழல்கின்றச் சூறையெனுங் காற்றைப் போன்றே
....தொன்மத்தைத் தொல்தமிழால் மாற்றும் வீச்சே!
தழலென்னுந் தீக்கதிரின் தீண்டல் போன்றே
....சலிப்பின்றி என்பாட்டைத் தூண்டும் மூச்சே!
எழிற்றோப்பி(ல்) ஓர்ந்துருகுங் குயிலைப் போன்றே
....என்னுள்ளே என்புருக அணைக்குந் தீயே!
உழல்கின்ற ஆழியதன் சீற்றம் போன்றே 
.....உயிர்த்துளியின் பாட்டெடுத்து வாராய் நீயே!
 
அகவற்பா
===========
விண்ணுயர் தமிழிலே விஞ்சிடும் புகழ்செய்
தண்ணெழிற் பாட்டிலே தாரணி போற்றிடக்
கோணலைக் கேடினைக் கூனதைச் சாய்க்கவே
வாணியும் தந்தவெம் வாரிதிப் புனலே;
வேணுவி(ன்) இசையாய் விண்ணின் நிலவாய்
வாணுதல் நங்கையாய் மன்னவன் கண்ணனைக்
காதலி வடிவிலுங் காட்டிய
ஆதவ பாரதி ஆர்த்தெழு(ம்) ஊற்றே!

வெண்பா
==========
சொல்லுக்கு வேந்தன் சுப்ரமண்ய பாரதி
வில்லுக்கு வேந்தன் விசயனெனச் சொல்லெடுத்துக் 
கொள்ளித் கணையெனவே கும்பினியர் ஆட்சியற 
தெள்தமிழில் பாடியதோ தேன்.

கட்டளைக் கலித்துறை
======================
ஆத வனாயொளி வீசும் அனற்கவி யாற்றலுடன்,
நாதி யிலாதவர் தாழ்ச்சி யெனும்நிலை மாற்றிடவே;
சாதி யதைப்பெருந் தூசெ னவேபலர் சாற்றிடவே;
பேத மிலாதினி வாழ்க வெனக்கவிப் பேச்சுரைத்தான்!

எண்சீர் விருத்தம்
==================
கணிப்பொறியும் மென்பொருளும் மேலை நாட்டுக்
     கருவிகளென் றிருப்பதனால் ஆங்கி லத்தில்
நனிசிறக்கப் படித்திடலாம் என்போர் தம்மை
     நையபுடைக்கும் பாரதியின் கூற்று முண்டே!
பிணிபிடித்த கண்களிலே மருந்து மிட்டு
     பிணிதீர்க்க முயலாமல் பிரான்சுக் கண்கள்
கொணர்ந்திங்கு வைத்திடவே வேண்டும் என்ற
     கோணலறி வாளரென்று தூற்று கின்றான்!

அகவற்பா
===========
சொல்லரசுத் தம்பன்;  துயிலிலும் பாட்டால் 
வல்லரசை ஆட்டிய வம்பன்! கவியால் 
நல்லவரை ஈர்த்த நற்றமிழ்க் கம்பன்;
கொல்பகை கண்டால் கொதித்த கொம்பன்!
தேர்ந்த செங்கனித் தேனாய் அமிழ்தாய்
நேர்த்திப் பாப்புனை நேர்கவி பாரதியின்
சீர்த்தமிழ் சேந்திய புதுவை
சேர்ந்த பாரதி செந்தமிழ்ச் சாரதியே!

வெண்பா
==========
தூணெனவே அன்னியரை சோர்விலா தெதிர்த்துநின்ற 
மாணமுத பாரதியின் மன்னுதமிழ்க் பாக்களிலே
காணுங் குமுகாயக் கார்முகிலாஞ் சிந்தனையென்
தோணி யெனவாகுஞ் சொல். 

கட்டளைக் கலித்துறை
======================
ஏதி லியாயழும் ஏழை களுக்குணர் வேற்றிடவே, 
சூது களையனற் சூரி யனாய்நிதம் சுட்டெரிக்கப்
பூத லமும்புகழ்  பாடி  டவேபல போர்ப்பரணி 
பாதை யினைச்சொலும் பாக்க ளெனுங்கவிப் பாட்டெடுத்தான்!

எண்சீர் விருத்தம்
==================
துடிக்கின்ற தீக்கனலின் ஆற்றல் பேச்சு; 
.....சொடுக்கிவிட்ட சிந்தனையின் சீற்றப் பூச்சு! 
வெடிக்கின்ற வெந்நீரின் ஊற்று வெள்ளம்; 
.....விரிந்தகனிச் சுவைமுதச் சாற்றின் உள்ளம்! 
நடிக்கின்ற கும்பினியர் செய்த கேட்டை 
.....நயபுடைத்த நெருப்புநிகர் கவிதைச் சாட்டை! 
மடிந்தழியும் எம்மொழியைக் காக்க வென்றே 
.....மறுபடியும் பிறப்பெடுத்து வாரா யின்றே!

அகவற்பா
===========
மற்றவர் மொழியை அழிக்கவே இங்கு, 
மயங்கப் பேசியே ஏய்த்து வாழும், 
குற்ற உணர்வு ஏது மில்லாக் 
கூவிடும் அரசியல் பொய்யும் மாய, 
முற்றிய பைத்திய முரண்டு பிடிக்கும்
மூளைச் சலவை முழங்கும் பேர்களால்
வற்றிய தமிழைக் காக்க
மறுபடி பாரதி வாராய் இன்றே!

புதன், 18 அக்டோபர், 2023

வாழ்க்கைக் கல்வி

இறங்கிய நாள்முதலாய், இருந்திறக்கும் நாள்வரையில் எத்தனையெத்தனையோ கற்கிறோம்.  கற்றலே மேன்மை.  நம் பிள்ளைகளுக்குக் கல்வியைத் தராமல் இருந்துவிடாதீர்கள். கட்டிக் கொடுத்தச் சோறும், சேர்த்து வைத்த செல்வமும் வாழ்வியலை மேம்படுத்தும் என்பது மிகக் குறைந்த மாற்றுக் கருத்தே.  கற்றவரில் ஒரிரண்டு விழுக்காடு மூளை மழுங்கியவராய், தன்னலம் கொண்டவராய், அடுத்தவரை ஏய்ப்பவராய் இருக்கலாம்.   ஆனால் கற்றவர் அனைவரும் தீயவரல்லர்; எனவே கல்வியால் மட்டுமே யாரையும், எதையும் பகுத்தறிய ஏலும்.  நான் சொல்கிறேன் என்பதற்காய் எதுவும் மெய்ம்மை ஆகிவிடாது.  காலத்தீ  புடம் போட்ட, ஐயனின் குறளைப் பார்த்தாலே விளங்கும், "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு."

====================================








====================================
வாழ்வியற் கல்வி: 
(கட்டளைக் கலித்துறை)
===================
பரந்த மரத்திலே நூலின்றிச் சிக்கிய பட்டமதைத் 
துரட்டியாய் மேலேறி தொற்றி யெடுக்கத்  துணிந்தவனை, 
வரிப்பூண் மினுக்கும் மிளாறால் விளாசிய மாமனது 
கரந்தடி கூடப் புவியில் தகவான கல்வியன்றோ?

கண்ண னவரின் கடைக்கு விரைந்துநீ காற்றெனவே
எண்ணெய் யுடன்வா வென்றுபணம் தூக்குடன் என்றெனையே
அன்னை அனுப்பியச் சொல்மீறிக் கைச்சூதாம் ஆட்டமெனும்
கண்கட்டில் விட்டதாற் கண்ட அடிகூடக் கல்வியன்றோ? 

கட்டு நுடங்கிடைக் கன்னியைக் கண்ணாலே கண்டதுமே 
சிட்டின் சிறகாய் சுழன்றா டுகின்றவென் சிந்தனையாங் 
கட்டிலா மாமன மத்தாப்பை இல்லாளுங் காதுபற்றிக் 
கட்டறக் குட்டிடக் கற்றதும் கற்பகக் கல்வியன்றோ? 

பள்ளிக் கழிவறைப் போந்தே திருடன்போல் பாதகமாங் 
கொள்ளி யிடும்புகைக் கோதாம் பழக்கத்தைக் கொன்றுவிடச் 
சுள்ளெனச் சொல்லியே ஆசான் அரும்பால சுந்தரவர், 
கள்ள மழிக்கக் கொடுத்த அடிகூடக் கல்வியன்றோ? 

நற்றாயும் தன்னிடைப் பாரம் இறக்கிய நாள்முதலாய், 
வெற்றுடற் றீயிலே வெந்தங்கு வெண்ணீறாய் வீழும்வரை, 
உற்றிடுந் துன்பமே ஆயிர மானாலு முண்மையிதே; 
கற்பிக்கும் யாவுமே கோடி யெனுமருங் கல்வியன்றோ?
===========================================
இராச. தியாகராசன்

பிகு:
துரட்டி = மரமேவிய காய்/ பொருளை சிக்கலின்றி எடுக்கும் கோல்.
மிளாறு = தண்டிக்கும் பிரம்பு/ மெல்லிய குச்சி. 
கரந்தடி = மறைந்து சடுதியில் அடித்தல்/ கொரில்லாப் போர்முறை.
நுடங்கிடை = சிற்றிடை/ நுட்பமான இடை.
கோது = குற்றம்/ பதர்.

பெண்டிரின் உண்மை உயர்வு...

எனக்குச் சாதியுமில்லை; மதமுமில்லை; ஆற்றலுணர், அறிவென்ற அகண்ட அறிதலு மில்லை: எழுச்சியுடன் ஆர்த்தெழுகும் ஆற்றலில்லா அறிவிலி யென்றிங்கே அலைந்தலைந்து தேடுகிறேன்; அறம் எங்கேயென்றே தேடுகின்றேன்!  எதற்கிந்த விளையாட்டு; ஏனிந்தத் தீக்குளியல்?  வேதனைதான் வாழ்வென்றால், மேதினியில் நீதியெங்கே? நாதனவன் நேர்கணக்கை நாடுகின்றேன் நாடோறும்! 

காதலும்/ கனவுலா கவிதை மட்டுந்தான் சாசுவதமோ? சாற்றுங்கள் சற்றே! நடக்கும்  கொடுமைகளைப் பேச வாயற்ற, சாதிமதச் சழக்குகள் தருவதென்ன? உனக்கும் ஆறடி/ எனக்கும் ஆறடி;  இல்லையெனில் உனக்கும் ஒருவண்டி எருமுட்டை; எனக்கும் ஒருவண்டி எருமுட்டை.  இதில் இறுமாப்பு/ ஏக்கழுத்தம் கொண்டு ஆட்டங்கள்.  கவிஞர்களே பாடுங்கள்; நாளைய வைகறைக்காக இன்றே அறம் பாடிச் சாடுங்கள்.  வெங்கதிர் எழுந்து வெள்ளியொளி பரவட்டும்.

===========================================

===========================================
பெண்டிரின் உண்மை உயர்வு....
==============================
மங்கைச் சிட்டென, மலரும் மொட்டென, 
மினுக்கும் பொட்டென, வெள்ளித் தட்டெனத் 
தங்கத் துகளாம் சங்கத் தமிழைக் 
தழுவி யணைக்குஞ் சந்தக் கவிஞரே!

மின்னும் பாக்கள் விளையும் மாகடல்;
மின்னுங் கவிஞர் வனையும் பாக்கடல்;
சித்தக் கடலில் சிக்குஞ் சிப்பிகள்;
எத்தனைச் சிப்பியில் இருக்குமோ முத்து?

அருமைத் தமிழ்க்கரை அளையுமென் கரத்திலே,
தரமெனக் கிடைப்பதோ சங்குஞ் சோழியும்; 
ஆழியின் கரையிலே அலையால் ஒதுங்கிடும் 
சோழியும் கிளிஞ்சலும் சுந்தரச் சிப்பியுஞ்

சந்தனத் தமிழின் சங்குஞ் சிறப்பெனில், 
செந்தமிழ் நித்திலஞ் சேர்வது மெவர்க்கோ?
பழச்சுவைக் கவிதை பழமைதா னாயினும், 
உழலுமென் நினைவிலே வெறுமை; உண்மை!

கற்பனைக் கவிவளம் கவிஞனின் சொத்து; 
விற்பனைக் கல்லவ் விளையும் முத்து! 
ஆழ்கடல் நுளைந்தே அறிஞரும் முத்தினை 
மூழ்கித் தேடி முனையும் போதிலே,

சூழ்மலை முகிலெழிற் சூழலைப் புனைகையில், 
வாழ்விலே பெண்ணின வன்முறை சாடுவீர்! 
கவின்மிகு கனவுலாக் காதலை வனைகையில், 
புவியினில் பொன்மகள் பொறுதலைச் சாடுவீர்!

நாணுமச் செம்மொழி நங்கையைப் பாடுவோர்க் 
காணுமிப் பெண்ணழி கள்ளமுஞ் சாடுவீர்!
கண்நிகர் முன்னோர் நன்னெறி ஏத்துவோர்ப் 
புண்நிகர் புல்லரின் புன்னெறி சாடுவீர்!

மன்னுயிர் காத்திடும் மழைவளஞ் சொல்கையில், 
இன்றைய மங்கையர் இழிநிலைச் சாடுவீர்! 
பாட்டி லுறைந்திடு பண்ணிசைப் போற்றுவோர் 
நாட்டின் நங்கையர் நாசமுஞ் சாடுவீர்!

பல்சுவை யுணவால், பல்வகை யணியால், 
நல்லரும் நிலையை நங்கைய ருறுவரோ? 
இருக்கையில் மகளிரு மின்றே பெற்றிடும் 
உரிமைதான் உண்மையில் உயர்வெனச் சாற்றுவீர்!
=====================================
இராச. தியாகராசன்.


சனி, 1 ஏப்ரல், 2023

நூற்கடல் திரு தி.வே.கோபாலய்யர்...

காவிரிக்கரையில் திரு வேங்கட்டராமன், திருமதி இலக்குமியம்மாள் ஆகியோர்க்கு நல்மகனாய் பிறந்தவர், மாந்தக்கணினி, நூற்கடல் என்றெல்லாம் போற்றப்பட்ட திரு தி.வே.கோபாலய்யர்.  அவர் வாழ்ந்த காலத்தில், அவருடன் அளவளாவி, என்றன் இலக்கண ஐயம் பலவற்றை அகற்றி, நான் தெளிவு பெற்றிருக்கிறேன்.  அவருடைய 26 ஆண்டுகால உழைப்பில் உருவான18 தொகுப்புகள் கொண்ட, "பேரிலக்கண அகராதி," தானெனக்கு இற்றைக்கும் என் இலக்கண ஐயங்களைக் களைய உதவுகிறது.

==================================

==================================
நூற்கடல் தி.வே.கோ.
====================
நல்வேங்க டத்தவனின்* நற்றிருவின்* நெஞ்சினிக்கச்
செல்வச்சீ ரென்றேதி வேகோபா லய்யரவர்,
பல்கலையின் நூற்கடலாய்ப் பன்னாடு மேத்திடவே
நெல்மணக்குங் காவிரியின் நீர்க்கரையிற் றான்பிறந்தார்!
 
** சீவகப்பெ ருங்கதையுஞ் சேனாவ ரைய்யமுடன்,
     தேவாரம், கம்பரசம் தேந்தமிழி லக்கணங்கள், 
     நாவார நாம்படிக்க நாலாயி ரத்தின்நற்
     பாவுரையும் பைந்தமிழில் பாங்காகத் தான்தந்தார்!

நேயப்பா வாணரவர் நீணிலத்திற் றந்துவிட்ட
தூயதமிழ்ப் பேரகரா திக்கிணையாய் நம்மவரும்
ஆய்ந்தறிந்தி லக்கணத்திற் கற்புதத்தொ குப்பதனை
தோய்ந்தறிந்து தந்ததமிழ்த் தொண்டு!
=======================================
இராச தியாகராசன்

பிகு: 
===
*வேங்கடத்தவன்:     தந்தை பெயர்: வேங்கட்டராமன்.
*நற்றிரு                   :     தாயின் பெயர்: இலக்குமி அம்மாள்.
**நூற்கடல் தி.வே. கோபாலய்யர் எழுதிய நூல்களை பட்டியலிட்டு    
    கொடுத்துள்ளேன் பாடலில்.

வியாழன், 30 மார்ச், 2023

உள்ளங்கவர் காதலி....

பலருக்கும் அன்பான காதலி இருக்கக் கூடும்.  அவருடனேயே திருமணமும் ஆகியிருக்கக் கூடும்; ஆகாமலும் போயிருக்கக் கூடும்.  ஆனால் காதலென்பது மெய்ம்மை.  என்னுடைய உள்ளங்கவர் காதலி யாரென்று கேட்கிறீர்களா?

================================

மகாகவி பாரதி













================================
யாரென்றன் உள்ளங்கவர் காதலி?
================================
காவதனிற் கதிர்பரப்புங் கதிரவனைக் காண்கையிலே, 
மேவுநிலா நெஞ்சகத்தில் நெருஞ்சியெனத் துளைக்கையிலே, 
பூவமர்ந்து வண்டொன்று பூந்தேனைச் சுவைக்கையிலே,  
நாவமர்ந்த நற்கவிதை நறுந்தேனாய் சுரக்கையிலே,
 
மழலைகள் மண்மேலே மலர்போலப் பறக்கையிலே, 
குழலூது மிசைகூட குளிர்வளியா யுறைக்கையிலே, 
எழிலாரு மோவியமு மினித்தென்னை யிழுக்கையிலே, 
விழிக்குமந்த வைகைறையும் வெண்பட்டா யொளிர்கையிலே, 

அன்பின்றி எதற்கிந்த அவலமென்றே அழுகையிலே, 
என்வாழ்வில் நான்தளர்ந்தே இடிந்தொருநாள்  விழுகையிலே, 
உன்மத்தம் பிடித்தவன்போ லோடித்தேய்ந்  தெரிகையிலே, 
பின்னல்க ளென்வாழ்வின் பேதமையாய்ச் சிரிக்கையிலே

எனைச்சேர்ந்த என்னவளும் என்னருகிற் றானிருந்தே, 
பனித்துகளின் சாறெனவே பற்றியெனைப் பரிவுடனே 
கனிச்சுவையா யினிக்கின்ற கற்கண்டுக் களிப்பூட்டி, 
மனச்சோர்வைக் கணப்போதில் மாயமென மாற்றிடுவாள்!

உள்ளமதி லின்பஞ்சே ருயர்வான தருணத்தில், 
கள்ளமற இயல்பெழிலாய்க் கைக்கோத்து வந்திடுவாள்;
வெள்ளமென இயற்கையவள் வெளிப்போந்த  நிலையழகை, 
உள்வாங்கும் வேளையிலு முடனிருந்தே சுவைத்திடுவாள்!

அகவையோ மீறியுனைக் காடணுகும் வேளையிலே, 
முகநூலில் பகர்கின்றாய்; அகச்சுவையின் காதலியை!
நகைப்புத்தான் வெட்கமில்லை; நானிலத்தோர் சிரிப்பாரே!
பகிர்விதுவோ பண்பென்று பார்முழுதும் கரிப்பாரே! 

சீரணங்காய்த் துணையிருக்கச் சீயமென மகனிருக்க, 
யாரவந்தக் கள்ளியென யாவருமே கேட்பீர்கள்; 
சாரதியாய்க் கவிச்சொடுக்கித் தமிழ்த்தேரி ழுத்திட்ட 
பாரதியின் கவிதையெனும் பைங்கிளிதா னக்கள்ளி!

காலமெலா மென்னுடனே காதலியாய்க் கற்பனையில், 
ஆலெனவே ஆழ்ந்தூன்றி அரவணைத்து நிற்பவளைச் 
சீலமொடு சீர்த்திகளைச் சேர்த்திருக்க வைப்பவளை, 
மேலிருந்து படியுங்கள்; மீண்டுந்தான் படியுங்கள்!
=========================================
இராச. தியாகராசன்.

சனி, 10 டிசம்பர், 2022

பாட்டன் மறுபடியும் வரவேண்டும்....

சிந்துவேந்தனுக்குப் பிறந்தநாள் (டிசம்பர், 11ஆம் நாள்).   மக்கள்கவி, மாந்தநேயன், நாட்டுப்பற்றாளன், விடுதலைப் போராட்ட வீரன், சமுதாயச் சீர்திருத்தவாதி,  என்றெல்லாம் ஊரெங்கும் போற்றப்பட்ட மகாகவியின் இறுதிச் சடங்கிற்கு வந்தவர்கள் வெறும் 14 பேர்கள் மட்டுமே!  இருக்கும் போது ஒருவரின் மதிப்பைப் போற்றாது விட்டுவிட்டு, இல்லாமல் போன பின்னர், நம்நாட்டு அரசியலார் செய்கின்ற மரியாதை என்ன; சூட்டுகின்ற கணக்கிலடங்கா மாலையென்ன; நடத்துகின்ற நாடகமென்ன?

கம்பன், புகழேந்தி, ஔவை, ஒட்டக்கூத்தர், காளமேகம், தாகூர், பாவேந்தர், கவியரசு, சேக்சுபியர், காஃப்கா, யீட்சு, கீட்சு, வேட்சுவர்த்து, நெருடா, எசுரா பவுண்டு, பைரன் இப்படிப் பலரின் (இன்னும் பல கவிஞர்கள்) பாடற்   படைப்புகளில் மூழ்கித் திளைத்தே அகங்குளிரச்  சுவைத்திருந்தாலும்,  நம்முடைய சிந்து வேந்தனின் கவிதைகளே என்றன் முதல் காதலி; அவனே என்றன் கவிதைகளின் தோணி.  இந்தப் பிறந்தநாளில் அவனுடைய மொழியாற்றலை, கவித்திறனை, நாட்டுப்பற்றை, சமத்துவ அறத்தை, குமுகாயச் சிந்தனையை எண்ணி நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.  

=========================================
தேனமுத வாரிதியாய்த் தீந்தமிழின் காவலனாய்க்  
காணிநிலம் காளியிடம் கேட்டவனின் பாக்களிலே 
காணுங் குமுகாயக் கார்முகிலாஞ் சிந்தனையென்
தோணி யெனவாகுஞ் சொல்.
=============================













=============================
பாட்டன் வரவேண்டும் இன்று!
=============================
மொழியென்னும் தமிழ்புரவித் தேரைப் பூட்டி,
.....மோடுமுட்டிச் சழக்ககலப் பாட்டுந் தீட்டி,
வழக்கென்றும் மன்றென்றும் அலைந்தே சோர்ந்த, 
.....மாகவிக்கின் றூரெல்லாம் முழங்கும் வாழ்த்து!
செழுமையுடன் சுற்றமதோ வாழ்த்த வில்லை;
.....செருக்கர்கள் நீபிழைக்க விடவு மில்லை;
இழுத்திழுத்தே ஊரெங்கும் ஓட விட்டே,
.....இளைப்பார இடமுமின்றி மாய்ந்தா யன்றே!

துடிக்கின்ற தீக்கனலின் வெம்மை பூச்சு; 
.....சொடுக்கிவிட்ட சிந்தனையின் சீற்றப் பேச்சு! 
வெடிக்கின்ற வெந்நீரின் ஊற்று வெள்ளம்; 
.....விரிந்துமணம் வீசுகின்ற மலரின் உள்ளம்! 
நடிக்கின்ற அரசியலார் செய்யும் கேட்டை 
.....நயபுடைக்கும் நெருப்புநிகர் கவிதைச் சாட்டை! 
மடிந்தழியும் எம்மொழியைக் காக்க வென்றே 
.....மறுபடியும் பிறப்பெடுத்து வாரா யின்றே! 

மற்றவரின் தாய்மொழியை அழித்தே இங்கு, 
....மயக்குமொழி பேசிநிதம் ஏய்த்தே வாழும், 
குற்றமன உணர்வுநிலை ஏது மில்லாக் 
.....கொக்கரிக்கும் மேட்டிமையின் திட்டம் மாய, 
முற்றிவிட்ட பைத்தியஞ்செய் சட்டஞ் சாய, 
.....முத்தமிழால் சொல்லடுக்கும் பாட்டுத் தீயால், 
வற்றிவிட்ட வண்டமிழை காக்க வென்றே, 
.....மறுபடியும் பிறப்பெடுத்து வாரா யின்றே! 

கரிமிதித்தோ காலனவன் கவர்ந்தா னும்மை? 
.....கால்வருடிக் கயவருனைக் காட்டித் தந்தே, 
சிரித்தபடி சிலுவையிலே அறைந்தாற் போலச் 
.....தீயுளத்தோர் வஞ்சகமாய்ச் சாய்த்து விட்டார்; 
எரித்தழிக்க முடியாத காற்றின் வீச்சாய், 
.....எத்தரையே பொசுக்கிவிடும் கவிதை மூச்சாய், 
மரிக்கொழுந்தின் மயக்குமந்த மணத்தை போல, 
.....மறுபடியும் பிறப்பெடுத்து வாரா யின்றே! 
==================================
இராச. தியாகராசன்